சூடான் மோதல்கள் காரணமாக 430,000 இற்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என ஐநா இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான இம்மோதல்கள் காரணமாக, 334,000 பேர் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்துள்ளனர் ஐநாவின் சர்வதேச குடியேற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் சூடானிலிருந்து அயல் நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அகதிகளுக்கான ஐநா உயர் ஸ்தானிகராலயத்தின் (யூஎன்எச்சிஆர்) பேச்சாளர் ஒல்கா சாராடோ கூறியுள்ளார்.
சூடான் இராணுவத்துக்கும் துணை இராணுவப் படையினருக்கும் இடையிலான மோதல்கள் தொடரும் நிலையில், 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயரக்கூடும் என யூஎன்எச்சிஆர் மதிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டின் சூடானுக்கான உதவித் தொகையாக தான் கோரிய 1.75 பில்லியன் டொலர்களில் 14 சதவீதம் மாத்திரமே கிடைத்துள்ளதாகவும் 1.5 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.