தங்காலை கொடிகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தங்காலை பகுதியிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸ நோக்கி பயணித்த வேன் ஒன்றும் ரன்னவிலிருந்து தங்காலை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் வேனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஐந்து பேரும் லொறியின் சாரதியும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேனில் பயணித்த சிறு குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள குழந்தையின் தாய் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியின் சாரதி உறங்கியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.