இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அதிக ஆசனங்களை வென்றுள்ளது.
பிரிட்டனின் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி, பாரிய தோல்வி அடைந்துள்ளது.
இங்கிலாந்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.
இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனாக் கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் அவரின் கட்சி எதிர்கொண்ட முக்கிய தேர்தல் இதுவாக கருதப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை முதல் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான ஆளும் பழைமைவாதக் கட்சி 40 இற்கும் அதிகமான உள்ளுராட்சி சபைகளின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சி 1,000 இற்கும் அதிகமான ஆசனங்களை இழந்துள்ளது. 2,299 ஆசனங்களை அக்கட்சி வென்றுள்ளது. இது கடந்த தடவை அக்கட்சி பெற்றதைவிட 1,058 ஆசனங்கள் குறைவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெய்ர் ஸ்டார் தலைமையிலான தொழிற்கட்சி 2,674 ஆசனங்களை வென்று முதலிடம் பெற்றுள்ளது.
பிரிட்டனின் வட அயரலாந்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.