Our Feeds


Tuesday, May 2, 2023

News Editor

நாட்டில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு


 நாட்டில் இல்லாதொழிக்கப்பட்ட தொழுநோய் மீண்டும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் கம்பஹா மாவட்டத்தில் 42 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அறிகுறிகள் தென்படுவது தொடர்பில் சந்தேகம் இருப்பின் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இந்திக்க வன்னிநாயக்க தெரிவித்தார்.


தொழுநோயாளியுடன் நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகுவதால், உமிழ்நீர் மூலம் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால், இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், உடலில் சந்தேகத்திற்கிடமான தழும்புகள் இருப்பின், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் கடந்த வருடம் 138 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வருடம் நோயாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடம் இனங்காணப்பட்ட தொழுநோயாளிகளில், கிட்டத்தட்ட எட்டு சதவீத குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடனேயே முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் தொழுநோயைக் குணப்படுத்த முடியும் எனத் தெரிவித்த தொழுநோய் நிபுணர், உடலில் சில சந்தேகத்திற்கிடமான நிறமாற்றப் புள்ளிகள் காணப்படுவதுடன், தழும்புகள் மற்றும் கைகளில் கூச்ச உணர்வு இருப்பது இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »