பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு இலங்கையின் தேசிய கிறிஸ்தவப் பேரவை தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பி.டி.ஏ என்ற பயங்கரவாத தடைச்சட்டம் ரத்து செய்யப்படும் என்றும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கடமைகளை மீறாத புதிய சட்டம் உருவாக்கப்படும் என்றும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வாக்குறுதி அளித்தன.
எனினும், முன்மொழியப்பட்ட ஏடிஏ என்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், இந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது.
எனவே இந்த விடயத்தில் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறலை தேசிய கிறிஸ்தவ சபை கோருகிறது.
ஏடிஏ என்ற புதிய சட்டமூலம், எதிர்ப்புக்கள், தொழிற்சங்க நடவடிக்கை, பயங்கரவாதச் செயல்கள் உள்ளிட்ட கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகள் தொடர்பில், தெளிவற்ற வரையறைகளைக் கொண்டுள்ளது.
இந்த வரையறை எதிர்ப்பாளர்களை 'பயங்கரவாதிகளாக' ஆக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் இலங்கையின் தேசிய கிறிஸ்தவப் பேரவை குறிப்பிட்டுள்ளது.