ஆங்கிலத்தில்: சஜிலா சசீந்திரன்
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வைத்திய நிபுணர்கள் எவ்வாறு 480 கிராம் நிறையுடைய குழந்தை உயிர் பிழைத்தது என்பதன் விபரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
குழந்தையின் தாய் டுபாய் நாட்டின் லத்தீபா வைத்தியசாலைக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தானும் வீரமிகு தனது குழந்தையும் பிறந்த வைத்திசாலை அது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தம்பதியினர் அவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் தினமன்று தங்களது இதயம் நிறைந்த மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டார்கள்.
குழந்தை குறை மாதத்தில் பிறந்தபோது அதன் நிறை 480 கிராம் கிராம் மாத்திரமே. இது அவர்களது முதல் குழந்தையும் கூட. தங்களது இந்தச் சிறிய குழந்தையைக் காப்பாற்றிய டுபாய் லத்தீபா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.
ருஷானா பிரசவத்திற்காக கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
‘எனது தாய்மை சவாலுக்குரியது’ என்று தெரிவிக்கப்பட்டது. ருஷானாவின் குழந்தை பிறந்தாலும் உயிர் பிழைக்காது என டாக்டர்கள் எச்சரித்தார்கள். அப்போது அவளது இதயம் சோகத்தில் மூழ்கியது.
‘நான் பிரசவ அறையில் வைக்கப்பட்டு ஒவ்வொரு மணித்தியாலமும் கண்காணிக்கப்பட்டேன். டாக்டர்கள் கர்ப்பத்தில் இருந்த குழந்தையின் இதயத்துடிப்பினை தொடர்ந்து பரிசோதித்தார்கள். இதயத்துடிப்பின் வேகம் சாதாரணமாகவே இருந்தது. அதாவது எனது குழந்தை நலமாக இருந்தது’என்றாள் ருஷானா.
என்றாலும் குழந்தை குறைமாதத்தில் இருந்ததால் பிரசவம் ஏற்பட்டால் நிலைமை மோசமாகும் என டாக்டர்கள் விளக்கினார்கள். சில வேளை கருச்சிதைவு ஏற்படலாம் என்றும் கூறினார்கள். இந்த நிலைமைக்கே நான் ஆளாகியிருந்தேன்.
ஒரு நாளின் பின்பு குழந்தையின் நிறை மிகவும் குறைந்ததாக இருக்கலாம் என்றார்கள். குழந்தை 500 கிராம் நிறைக்கும் குறைவாகப் பிறந்தால் தொடர்ந்து வாழக்கூடியதாக இருக்கமாட்டாது என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அநேகமாக குழந்தையை உயிர்ப்பிக்க முடியாது போகும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
வைத்திய குழுவினரின் இத்தகைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு மத்தியில் ருஷானா டாக்டர்கள் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்திருந்தாள். டாக்டர்கள் தனது குழந்தையை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
‘எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என டாக்டர்கள் என்னிடம் கூறினார்கள். நான் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு இரவையும் கண்ணீருடனே கழித்தேன். எனது குழந்தையைக் காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் தினமும் கையேந்தினேன். இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் கருணையே எனது ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது. அல்லாஹ்வையே நம்பியிருந்தேன்.
அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த காஸியாவின் சிறிய உடல் வாழ்வதற்காகப் போராடிக்கொண்டிருந்தது. டாக்டர்களும், தாதியர்களும் இரவு பகலாக சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்கள். ருஷானாவும் அவளது கணவர் முதாசிரும் ஒவ்வொரு நாளும் தங்கள் சிறிய குழந்தையை பார்க்க வைத்தியசாலைக்குச் சென்று வந்தார்கள். தொடர்ந்து தங்கள் குழந்தைக்காக பிரார்த்தித்தும் வந்தார்கள்.
“டாக்டர்கள் தாய்ப்பால் சிறிதளவில் வழங்குவதற்கு எனக்கு அனுமதியளித்தார்கள். நான் தொடர்ச்சியாக தாய்ப்பாலை அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு வழங்கிவந்தேன்” என்றாள் ருஷானா. அவள் ஆசிரிய உதவியாளராவார். தனது குழந்தை அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது ஆசிரிய தொழிலில் ஈடுபட்டார்.
அவள் ஒரு பெரிய மாம்பழத்தைவிட நிறை குறைவானவள். நாங்கள் அவளுக்கு ‘காஸியா’ என்று பெயரிட்டோம். அல்லாஹ்வின் ஆசிர்வாதத்துடன் மற்றும் டாக்டர்கள், தாதியர்களின் ஒத்துழைப்புடன் அவள் உயிருக்காகப் போராடியதால் ‘போர்வீரர்’ அல்லது ‘போராளி’ என்று பெயரிட்டோம் என்றாள் ருஷானா.
காஸியா தற்போது சுகதேகியாக இருக்கிறாள். அவள் ஆரோக்கியமான சாதாரண குழந்தை. இப்போது அவளது நிறை 2.3 கிலோ. தற்போது அவள் எந்த மருந்தையும் உட்கொள்வதில்லை. நாங்கள் அவளை வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்கிறோம் என்கிறாள் ருஷானா.
எனது பெற்றோர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு 45 வருடங்களுக்கு முன்பு குடியேறினார்கள். எனக்கும் எனது சகோதரர்களுக்கும் இதுவே எமது முதல் வீடு. நாங்கள் எங்கள் தாய் நாட்டுக்கு அரிதாகவே விஜயம் செய்கிறோம். இந்த நாடு ஐக்கிய அரபு இராச்சியம். எமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிறது. தற்போது இந்நாடு எனது குழந்தைக்கும் வாழ்க்கையை தந்துள்ளது என்றார் ருஷானா.
நன்றி : கல்ப் நிவ்ஸ்
- Vidivelli
