Our Feeds


Monday, November 27, 2023

ShortNews

அவுக்கன புத்தர் சிலைக்கு காவி ஆடை அணிவிப்பு - விசாரணைகள் ஆரம்பம்



அவுக்கன புத்தர் சிலைக்கு காவி ஆடையை அணிவித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தொல்லியல் மதிப்புள்ள சிலையின் தற்போதைய தன்மையை மாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அநுராதபுர காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுக்கன புத்தர் சிலை நாட்டிலுள்ள 'நிற்கும் புத்தர் சிலைகளில்' ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது.


கி.பி. 5ம் நூற்றாண்டில் தாதுசேன மன்னன் இந்த சிலையை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.


சிலையில் அங்கியின் மடிப்புகள் தெளிவாகத் தெரிவதாலும், மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டிருப்பதாலும், இந்நாட்டின் கடந்த கால கலையின் தனித்துவத்தைக் காட்டும் வடிவமைப்பாக இது கருதப்படுகிறது.


மேலும் தொல்பொருள் மதிப்புடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்களால் வழிபடப்படும் அவுக்கன புத்தர்  சிலைக்கு ஆடை அணிவிக்கும் செயலில் ஒரு குழுவினர் ஈடுபட்டதை காட்டும் பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளன.


சிலர் சிலையின் மேல் ஏறி அந்த ஆடையை அணிந்த விதமும் குறித்த புகைப்படங்களில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »