Our Feeds


Tuesday, April 2, 2024

News Editor

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு


 மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(01.04.2024) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,''மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பரீட்சை நடத்தி, பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலும் ஆசிரியர் வகையின் அடிப்படையிலுமே ஆரம்பகட்டமாக 2400 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

பரீட்சையில் சித்தியடைந்த ஏனையவர்கள் தொடர்பில் இந்த நாட்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் அவர்களுக்கும் நியமனம் வழங்க முடியும் என நம்புகிறேன்.

அதேநேரம் விஞ்ஞானம், கணிதம், தொழிநுட்பம், ஆங்கில பாடங்களுக்கு 2700 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக பரீட்சை நடத்தி முடித்திருக்கிறோம்.

இந்த வாரத்துக்குள் அவர்களுக்கு அதன் பெறுபேறுகளை வெளியிட இருக்கிறோம். அவர்களுக்கு கல்வி அமைச்சின் கீழ் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம்.

இதற்கு மேலதிகமாக நீதிமன்ற உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால 13ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 9 மாகாணங்களிலும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தற்போது நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எஞ்சிய பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுப்போம்."என கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »