Our Feeds


Monday, April 15, 2024

News Editor

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் எனப்படும் மரபணு சார்ந்த குறைபாடு


 தெற்காசிய நாடுகளில் பிறக்கும் பத்தாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு சிஸ்ட்டிக் ஃபைப்ரோசிஸ் எனப்படும் மரபணு சார்ந்த குறைபாடு ஏற்படுவதாகவும், இதற்கு முழுமையான நிவாரண சிகிச்சையை மேற்கொண்டால்.. அவர்களால் ஐம்பது வயதுக்கு மேல் வாழ இயலும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிஸ்டிக் ஃபைஃப்ரோசிஸ் என்பது பரம்பரையாக வரும் ஒரு மரபணு கோளாறாகும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல், செரிமான அமைப்பு உள்ளிட்ட பிற உறுப்புகளில் கடுமையான சேதம் ஏற்படுகிறது. குறிப்பாக நுரையீரல் பகுதியில் சளி தேக்கமடைந்து கடுமையான பாதிப்பை உருவாக்குகிறது. மேலும் இது நுரையீரலை மட்டுமல்லாமல் செரிமான மண்டலத்திலும், இனப்பெருக்க உறுப்பிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இத்தகைய நோய் தாக்கம் பிறந்த பச்சிளம் குழந்தைகளிலேயே உண்டாகிறது. இதன் காரணமாக தற்போது ஆண்டுதோறும் நுரையீரல் செயல்பாட்டு திறன் குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பிறக்கும் போதே இத்தகைய பாதிப்புடன் பிறந்திருக்கும் குழந்தைகளுக்கு சுவாச நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆண்டுதோறும் சீரான இடைவெளியில் நுரையீரல் செயல்பாட்டு திறன் குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தீவிர இருமல் அல்லது இருமலின் போது சளி வருதல் அல்லது சளியுடன் கூடிய இருமல், அடிக்கடி ஏற்படும் சைனஸ் தொற்று, ஒவ்வாமை, சீரற்ற வளர்ச்சி, ஒழுகற்ற குடல் இயக்கம், அடிக்கடி தாகம், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு உண்டாகுதல் .. போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்..‌உடனடியாக மருத்துவரை சந்தித்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.

இத்தகைய அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் சுவாச பாதையில் தொற்று பாதிப்பு, தொற்று பாதிப்பால் மூக்குப்பகுதியில் சதை வளர்தல், இருமலுடன் ரத்தம் வெளியேறுதல், நீரிழிவு, கல்லீரல் சார்ந்த பாதிப்பு ...போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படும். சிலருக்கு குழந்தையின்மை பிரச்சனைக்கும் முகம் கொடுக்க நேரிடலாம்.

எனவே மேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மருத்துவரைச் சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதன்போது பாதிப்பு பச்சிளம் குழந்தைகளுக்கு என்றால் அவர்களுக்கு பிரத்யேக பரிசோதனைகளும், பாதிப்பு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்பட்டிருந்தால்... அவர்களுக்கான பிரத்யேக பரிசோதனையும் மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். அத்துடன் மரபணு பரிசோதனை, கணையம், மூக்கு, நுரையீரல் செயல்பாட்டுத்திறன், ஆண் இனப்பெருக்க சோதனை போன்றவற்றை மேற்கொள்வர்.

இதனைத் தொடர்ந்து சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் உறுப்புகளுக்கு ஏற்ப சிகிச்சைகளை ஒருங்கிணைப்பர்.  நவீன மருத்துவ தொழில்நுட்பத்தால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இதனைத் தொடர்ந்து நுரையீரல் பாதிப்பை சீராக்குவதற்கான சிகிச்சையை மேற்கொள்வர். குறிப்பிட்ட மரபணு மாற்றத்தால் உண்டாகும் இத்தகைய பாதிப்பை சீராக்குவதற்காக மரபணு சார்ந்த பிரத்யேக சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர்.

வேறு சிலருக்கு இதனால் மூக்குப்பகுதியில் சதை ஏற்பட்டிருந்தால்... அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவர். வேறு சிலருக்கு இதனால் குருதியில் ஓக்சிஜன் அளவு சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டிருந்தால்.. அவர்களுக்கு ஓக்சிஜன் தெரபியை வழங்கி நிவாரணம் தருவர். வெகு சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் நுரையீரலை, நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்து நிவாரணம் வழங்குவர்.

டொக்டர் தீபா செல்வி, தொகுப்பு அனுஷா.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »