நாடளாவிய ரீதியில் 40 மே தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொழும்பு நகரில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் 14 மே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு மே தின நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வீழ்ச்சியடையாத மகத்தான நாடு எப்போதும் “எனும் தொனிப்பொருளில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் மாளிகாவத்தை P.D.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் இதற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்வின் தலைமையில் கொழும்பு கெம்பல் பாரக்கில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு கோட்டை செத்தம் வீதியில் மே தின கூட்டத்தை நடத்தவுள்ளது.
”நாட்டை உருவாக்கும் தீர்வுக்கு, ஒன்றான மக்கள் பலம்” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி நான்கு இடங்களில் மே தினக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.