Our Feeds


Saturday, May 11, 2024

Zameera

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி


 பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும் வகையில் அரசாங்கம் இரண்டு சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும் வகையில் அரசாங்கம் இரண்டு சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

குறித்த சட்டமூலங்களை வரும் ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி,  இதன் மூலம், ஆண் பெண் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் தொடர்பான தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்தல், பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவை நிறுவுதல், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையை ஸ்தாபித்தல் மற்றும் பெண்கள் உரிமைகள் மீறப்படுதல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான "உலகளாவிய வன்கொடுமை எதிர்ப்பு சைகைகள்" 3 கை முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் DP Education ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,

தம்மிக்க பெரேரா ஒரு மாற்றத்தை ஆரம்பித்துள்ளார். பெண்களுக்கு நிகழும் வன்முறைக்கு எதிராக அவர் தொடங்கிய திட்டம் பாராட்டுக்குரியது. DP Education போன்ற செயற்பாடுகள் எதிர்கால கல்வியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அன்று நாம் மரத்தடியில், கல் பலகைகளைப் பயன்படுத்தி கல்வி கற்றோம். பின்னர் கட்டடங்கள், புத்தகக் கல்வியில் இணைந்தன. இன்று போல் கையடக்கத் தொலைபேசிகள் இருக்கவில்லை.

மேலும் கல்வி காலத்துக்குக் காலம் மாறியது. விகாரை கல்வி முதல் பாடசாலைக் கல்வி வரை மாறுகிறது. இன்று ஸ்மார்ட் வகுப்பறை பாடசாலைக்கு வந்துள்ளது. தம்மிக்க பெரேரா DP Education மூலம் கல்வியின் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தி, இந்த நிதியத்தின் செலவில் 600 பாடசாலைகளுக்கு வசதிகள் வழங்கியுள்ளார். 

இதன் காரணமாக டியூஷன் வகுப்பறையும் மாறுகிறது. இதனுடன் செயற்கை நுண்ணறிவும் சேர்ந்தால் கல்வியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பிள்ளைகள் இந்தக் கல்வியில் பயன்பெற வேண்டும். நமது கல்வி முறையை மேம்படுத்தி அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியை வழங்க வேண்டும்.

அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஒரே அளவிலான கல்வியை நாம் வழங்க முடியாது. ஆனால் தொழில்நுட்பத்தின் மூலம், அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஒரே அளவிலான கல்வி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும்.

பெண்களுக்கு நிகழும் வன்முறைகளுக்கு எதிராக சைகைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது இன்று இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருகிறோம். பெண்களுக்கு எதிரான வன்முறையை எப்படி நிறுத்துவது என்பதை இந்த கை சமிக்ஞைகள் தெரிவிக்கும். பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். அதை வார்த்தைகளுக்குள் மட்டுப்படுத்த முடியாது. இந்தச் சைகைகள் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சமூகம் உணர்ந்து அதற்கு எதிராகப் போராட முடியும்.

இது குறித்து பரந்த அளவில் பேசப்படும் என நம்புகிறேன். நம் நாட்டில் செல்வந்தர்கள், நன்கொடையாளர்கள்  என்ற இரு வகையினர் உள்ளனர். நன்கொடையாளர்கள் சம்பாதித்து சமூக சேவை செய்பவர். தம்மிக்க பெரேரா அவ்வாறான ஒருவர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பெண்களுக்கு வலுவூட்டும் இயலுமை இந்தத் திட்டத்திற்கு உள்ளது.  

பொருளாதார நெருக்கடியின்போது பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உணவுத் தட்டுப்பாடு காரணமாகவும் பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர். சில குடும்பங்கள் பெண்களால் வழிநடத்தப்பட்டன. அதனால் பெண்களை வலுவூட்ட எதிர்பார்க்கிறோம். பெண்கள் வலுவூட்டலுக்கான சட்டம் மற்றும் பாலின சமத்துவச் சட்டம் என்பன பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன. 

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான தேசியக் கொள்கையை அமுல்படுத்துதல், தேசிய மகளிர் ஆணைக்குழுவை நிறுவுதல், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறையை நிறுவுதல், பெண்களின் உரிமை மீறல்களுக்கு வழக்குத் தாக்கல் செய்தல் உள்ளிட்ட நோக்கங்களை கொண்டு இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதன் பெண்கள் உரிமை பாதுகாப்பு ஆணைக்குழு ஒன்றும் நிறுவப்படவுள்ளது. எந்தப் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தாலும் அதற்கான தீர்வுகளை ஆணைக்குழு வழங்கும்.

மேலும், கல்வித் துறையில் பெண்கள் மிகவும் வெற்றிகரமானவர்களாக மாறி வருகின்றனர். பெண்களுக்கு முன்னாலிருக்கும் தடைகளை நீக்க வேண்டியது நமது பொறுப்பாகும். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மன்றம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் இது சார்ந்த பொறுப்புகள் உள்ளன. பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்த்து சமூக நீதியை நிலைநாட்டவே நாங்கள் பாடுபடுகிறோம்.

இரண்டு சட்டங்களையும் ஜூன் மாதம் நிறைவேற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் நான் ஏற்கனவே பிரதமருடன் கலந்துரையாடியுள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 25% ஆக அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்துடன், மாகாண சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம்.

மேலும், பெண்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். 2030 ஆம் ஆண்டுக்குள் பெண்கள் அரசியல் கட்சியை அங்கீகரிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இலங்கையில் பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் பெண்களுக்கு உரிய அந்தஸ்த்தை வழங்கவும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

DP Education ஸ்தாபகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா

தம்மிக மற்றும் பிரசிலா மன்றம் 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கல்வி வளம் மிக்க நாட்டை எப்படி உருவாக்கலாம் என்று சிந்தித்தே இந்த மன்றம் உருவாக்கப்பட்டது.  இன்று ஒழுக்கமான பாடசாலை மாணவர்களை உருவாக்குவதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடிந்துள்ளது. பதினைந்து இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு எங்களால் வசதிகளை செய்து கொடுக்க முடிந்ததுள்ளது. முன்பள்ளிக் குழந்தைகளுக்கான தனித் திட்டத்தையும் நாம் செயல்படுத்தியுள்ளோம்.

சிறுவர் உளவியலாளர்களின் வழிநடத்தலின் கீழ், இலங்கையின் பாரம்பரியத்திற்கு ஏற்ற கல்வியை சிறுவர்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை எடுத்தோம். அதற்காக 1000 பாலர் பாடசாலைகளை உருவாக்கி சிறுவர் பராயத்தை மேம்படுத்தியுள்ளோம்.

தெற்காசியாவில் எம்மை போன்ற வலுவான கலாச்சாரம்  கொண்ட சமூகம் இல்லை. மேலும், இலங்கையின் கல்வி முறை மிகவும் உயர் மட்டத்தில் இருந்தது. இந்த இரண்டு விடயங்களையும் கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மொழி அறிவை வழங்கி தர்மமும் தொழில்நுட்பமும் நிறைந்த இளைஞர்களை உருவாக்க முயற்சிக்கிறோம். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர்களான அனுப பெஸ்குவல், லசந்த அழகியவன்ன, அரவிந்த் குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சஞ்சீவ எதிரிமான்ன, ஏ.எச்.எம். பௌசி, அங்கஜன் இராமநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிடப் பிரதிநிதி குன்லே அதெனி, தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »