தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் எதிர்வரும் நாட்களில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு வேகமாகப் பரவி வருகின்றது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவ்வருடம் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, மே 26ஆம் திகதி முதல் தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மழையின் பின்னர் கொழும்பில் ஏற்படக்கூடிய டெங்கு அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.