Our Feeds


Sunday, June 9, 2024

ShortNews Admin

3 ஆவது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி !



இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளும் அரசை தேர்வு செய்ய கடந்த ஏப்ரல் 19-ம் திகதி முதல் கடந்த 1-ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 


இதில் கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 543 தொகுதிகளில் பா.ஜ.க. 240 இடங்களை கைப்பற்றியது.



அதேநேரம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. அத்துடன் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த கூட்டணி தொடங்கியது.



பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க இந்த கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை அந்த கட்சிகள் தேர்வு செய்தன.



இதைத்தொடர்ந்து பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கூட்டணியின் நாடாளுமன்றக்குழு தலைவராக (பிரதமர்) மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.



இதற்கான தீர்மானத்தை பா.ஜனதா மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். அதை அமித்ஷா, நிதின் கட்காரி மற்றும் கூட்டணி தலைவர்கள் வழிமொழிந்தனர். அத்துடன் மோடிக்கு மாலை அணிவித்து அவரை புதிய பிரதமராக அங்கீகரித்தனர்.



பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த அவர்கள் மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கினர்.



மேலும் பிரதமர் மோடியை ஆதரிக்கும் எம்.பி.க்களின் கையெழுத்திட்ட கடிதங்களையும், ஜனாதிபதியிடம் வழங்கினர்.



இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று முன் தினம் மாலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். அத்துடன் ஆட்சியமைப்பதற்கான உரிமையும் கோரினார். இதை ஏற்று பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.



அத்துடன் ஜனாதிபதி மாளிகையில் ஞாயிற்றுகிழமை (இன்று) இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டது.



முன்னதாக புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தொடங்கி இருந்தன. ஜனாதிபதி மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டு வந்தன.



இந்த விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.



மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பல்வேறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.


இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில், யார் யாருக்கெல்லாம் மத்திய அமைச்சர் பதவி வழங்குவது என்ற ஆலோசனையும் நடந்து வந்தது. குறிப்பாக பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த துறைகளை வழங்குவது என்று நீண்ட ஆலோசனை நடந்து வந்தது.


இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு நடைபெறும் வண்ணமயமான நிகழ்வில், நாட்டின் புதிய பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார்.



நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்கும் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.



அவரை தொடர்ந்து பல்வேறு மத்திய அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள். அவர்களுக்கும் ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.



இதைப்போல கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் சிலரும் மத்திய அமைச்சர் சபையில் இடம்பிடிப்பார்கள் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. ஒட்டுமொத்தமாக 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரதமர் மோடியை நேரில் வாழ்த்துகிறார்கள்.



இதற்காக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, செசல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அபிப் ஆகியோர் ஏற்கனவே டெல்லி வந்து விட்டனர்.



இதைப்போல நேபாள பிரதமர் பிரசந்தா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாலத்தீவு ஜனாதிபதி முகமது மொய்சு, மொரீஷியஸ் ஜனாதிபதி பிரவிந்த் குமார் ஜெகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோபே ஆகிய 7 நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.


பதவியேற்பு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »