Our Feeds


Monday, April 28, 2025

Sri Lanka

இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக செய்வார்கள் | சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்.



மத்தியிலே ஆளும் தரப்பிற்கு வவுனியா வடக்கு பிதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


வவுனியா புளியங்குளத்தில் இன்று (27) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா வடக்கில் போருக்கு பின்னர் கடும் வேகத்தில் குடியேற்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றது. வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுகட்சி ஆட்சியமைப்பதற்காக நாம் பல்வேறு செயற்பாடுகளை எடுத்திருந்தோம். 


இன்று நிலைமை மாறியிருக்கிறது. நாட்டிலே ஆட்சி செய்யும் ஒரு அமைப்பு இந்த பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு போட்டியிடுகின்றது. எனவே மத்தியிலே ஆளும் தரப்பிற்கு இந்த பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள். 


பாராளுமன்றில் எங்களுக்கு அடுத்தபடியாக இருந்த ஒரு கட்சி இன்று தேர்தல் மூலம் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஊழல், துஷ்பிரோயகம் என்று மாறிமாறி ஆட்சி செய்த தரப்பின் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது. எனவே அவர் 42 சதவீதம் வாக்குகளை எடுத்திருந்தாலும், மாற்றம் வருகின்றது என்ற எதிர்பார்ப்பிலே அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்தை மக்கள் கொடுத்தனர். 


அந்தவகையில் சாணக்கியனின் தனி முயற்சியினால் கிழக்கு தப்பிவிட்டது. துரதிஷ்டவசமாக வடக்கிலும் அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் எப்படியான முடிவு பாராளுமன்ற தேர்தலில் வந்திருந்தாலும் அங்கு மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சியே. ஒரு குடியும் மூழ்கி போகவில்லை. குறைந்திருக்கிறது தான். ஆனாலும் நாங்கள் தான் இன்றும் பிரதான தமிழ்க் கட்சி. அதில் மாற்றம் இல்லை. 


தேர்தல் முறைமையினால் ஏற்ப்பட்ட பிரதிபலனை வைத்து தமிழ் மக்களின் ஆணையும் எங்களுக்குத் தான் இருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசிய பிரச்சனையை தாங்கள் பார்த்து கொள்வோம் என்று கூறும் அவர்கள் அதிகாரப் பகிர்வில் நம்பிக்கை இல்லாதவர்கள். வட- கிழக்கு இணைப்பையும் பிரித்தவர்கள். அவர்கள் தமிழர்களின் ஆணை எங்களிடம் தான் இருக்கிறது என்று சொன்னால் அதைவிட அபத்தம் வேறு எதுவுமில்லை. அதைவிட மோசமான ஆபத்து எதுவும் கிடையாது. அந்த ஆபத்தை உடனடியாக நீக்க வேண்டும். 


எனவே பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரான முதலாவது சந்தர்ப்பம் இந்த உள்ளூராட்சி தேர்தல். இதில் தான் அதனை புறந்தள்ள முடியும். எமக்கு ஒற்றை ஆட்சியிலே இணக்கமில்லை. முறையான அதிகாரப் பகிர்வு வழங்கப்படவேண்டும். என்ற கோரிக்கைகளின் உறுதியான மக்கள் தீர்ப்பு தேர்தல்களில் இருந்தே வருகின்றது. 


எனவே, கடந்த தேர்தல் மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதனை களையக்கூடிய முதலாவது சந்தர்ப்பமாக இது உள்ளது. உள்ளூரின் ஆட்சியை கூட நாங்கள் தக்கவைக்க முடியாவிட்டால் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது என்று பரப்புரை செய்யக்கூடும். எனவே நாட்டுக்கும் உலகுக்கும் தெளிவான ஒரு செய்தியை சொல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இது. அதனை நாம் நழுவ விடக்கூடாது. 


எங்களுக்கு தேவை தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசை அப்படியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் இல்லை. அதை சொல்லுவது எப்படி. வாக்குகளை சிதறடித்துவிட்டு சொல்ல முடியாது. 


எனவே அதனை ஒருமுகப்படுத்தி சமஸ்டி என்ற ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் தமிழரசுகட்சிக்கு அந்த வாக்குகளை கொடுத்தால் எங்கள் அரசியல் நிலைப்பாட்டில் ஒரு உறுதி இருக்கும். எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்ற கனமான செய்தி சொல்லப்படும். அது கேட்கப்படும். அதுவே பலமானதாக இருக்கும் என்றார்.


-வவுனியா தீபன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »