முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் விசாரணைக் குழு உரிய முறையில் விசாரணைகளை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை மாத்திரம் தங்களது தரப்பு வழங்குவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை தொடர்ந்து சட்டமா அதிபரால் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும்.
இதனையடுத்து நீதிமன்றத்தின் ஊடாக சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சரியான சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள்.
அவ்வாறு இடம்பெறும் போது உதய கம்மன்பில, ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ஷ மற்றும் சரத் வீரசேகர போன்றோர் பதற்றமடைவது தொடர்பில் எமக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.