Our Feeds


Sunday, April 27, 2025

ShortNews

இந்தியா - பாக்கிஸ்தான் யுத்தம் ஏற்பட்டால் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக எண்ணக்கூடிய நிலைமை ஏற்படலாம் - தொலவத்த

 


அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து வெளியேறி

தற்போதைய அரசாங்கம் பக்கசார்பான கொள்கையையே பின்பற்றுகிறது. துரதிஷ்டவசமாக இந்தியா - பாக்கிஸ்தான் யுத்தம் அறிவிக்கப்பட்டால் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக எண்ணக்கூடிய நிலைமை கூட ஏற்படலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.


கொழும்பில் சனிக்கிழமை (26)  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த  அவர் மேலும் குறிப்பிடுகையில்,


பிராந்திய நாடுகளுக்கிடையில் யுத்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் இந்தியா, பாக்கிஸ்தானுக்கிடையில் யுத்த நிலைமை ஏற்பட்ட போது சிறிமாவோ பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற அரச தலைவர்கள் அமைதியை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கின்றனர். ஆனால் தற்போதுள்ள தலைவர்களுக்கு அவ்வாறான இயலுமை இல்லை.


இந்தியாவுடன் அரசாங்கம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் என்ன என்பது நாட்டுக்கு தெரியாது. அன்று இந்திய எதிர்ப்பு கொள்கையால் நாட்டில் வன்முறையை ஏற்படுத்திய ஜே.வி.பி. இன்று இரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றது.   


இவ்வாறு எம்மால் ஒருதலைப்பட்சமாக செயற்பட முடியாது. பாக்கிஸ்தானும் எமது முன்னெடுப்புக்களை அவதானிக்கிறது. பக்கசார்பாக செயற்பட்டால் பிராந்தியத்தில் மோதல்கள் ஏற்படுமே தவிர அமைதியை ஏற்படுத்த முடியாது.


அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து வெளியேறி தற்போதைய அரசாங்கம் பக்கசார்பான கொள்கையையே பின்பற்றுகிறது. துரதிஷ்டவசமாக இந்தியா - பாக்கிஸ்தான் யுத்தம் அறிவிக்கப்பட்டால் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக எண்ணக்கூடிய நிலைமை கூட ஏற்படலாம். காரணம் அரசாங்கம் பல்வேறு முக்கிய விடயங்களை மறைத்து வைத்திருக்கிறது.


அரசாங்கம் பொறுப்புடன் செயற்படாவிட்டால் அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். மக்களும் இதனை உணர வேண்டும். அரசாங்கம் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எனவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சிவப்பு எச்சரிக்கையை வழங்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »