பிள்ளையானின் கைதினைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முற்படும் தரப்பினரும் உள்ளனர். அந்த வகையில் அரசாங்கத்தின் திட்டம் என்ன என்பதை ரணில் விக்கிரமசிங்கவும், கம்மன்பிலவும் நன்கு அறிவார்கள். நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்பது விளையாட்டல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது பொலிஸாரைப் பயன்படுத்தி அரசாங்கம் புதிய செய்தியொன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பிள்ளையான் இந்நாட்டை பிளவுபடுத்துவதற்காக போராடிய பயங்கரவாதியாவார்.
அதன் பின்னர் பிரபாகரனுக்கு எதிராக கருணாவுடன் இணைந்து பிரபாகரனை தோற்கடிப்பதற்காக இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார். அவர் பாராளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கின்றார்.
எவ்வாறிருப்பினும் அவரைப் பற்றி எமக்கு நற்சான்றிதழ் வழங்க முடியாது. ஆனால் அவர் தவறிழைத்திருந்தால் அவரைக் கைது செய்வதற்கான உரிமை அரசாங்கத்துக்கு இருக்கிறது.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தப்பட்டமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டே பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி கூறுகின்றார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பரஸ்பரம் இதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிள்ளையான் தொடர்பில் விசாரிப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதேபோன்று சட்டத்தரணி என்ற ரீதியில் உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்ததை குற்றப்புலனாய்வுப் பிரிவினரே செய்தியாக வெளியிட்டனர்.
பயங்கரவாதியாகவே இருந்தாலும் சட்ட ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை எவருக்கும் இருக்கிறது. அந்த வகையில் பிள்ளையானுக்காக எந்த சட்டத்தரணி முன்னிலையானால் அரசாங்கத்துக்கு என்ன பிரச்சினை?
அதேபோன்று சேவை பெறுனரின் விருப்பத்துக்கமைய அவர் சார்ந்த விடயங்களை சட்டத்தரணியால் முன்றாம் தரப்பிற்கு தெரிவிக்கவும் முடியும். எவ்வாறிருப்பினும் இதில் அரசியல் இலாபம் பெற முற்படும் தரப்பினரும் உள்ளனர்.
அந்த வகையில் அரசாங்கத்தின் திட்டம் என்ன என்பதை ரணில் விக்கிரமசிங்கவும், கம்மன்பிலவும் நன்கு அறிவார்கள். நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்பது விளையாட்டல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.