Our Feeds


Thursday, April 17, 2025

ShortNews

யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது! - SLPP

 


NPPஐ தெரிவு செய்தால்  தான் உள்ளூராட்சி மன்ற

அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது முறையற்றதொரு கருத்தாகும். யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


கொழும்பில்  புதன்கிழமை (16) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்  தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை நாங்கள் கைப்பற்றுவோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  கிராமத்துக்கு சேவையாற்றியுள்ளது. ஆகவே  2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றதை போன்று இந்த முறையும் வெற்றிப்பெறுவோம்.


தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பொய் மற்றும் வெறுப்பு ஆகியவற்றை மாத்திரம்  மக்கள் மத்தியில் பிரதான அரசியல் கொள்கையாக மக்கள் மத்தியில் முன்வைத்தது. அரசியல் ரீதியில் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.


உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை தெரிவு செய்தால் மாத்திரமே  உள்ளுராட்சிமன்ற அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு கருத்தாகும். அரச தலைவர் என்ற வகையில் பதவிக்கு ஏற்றாட்போல் ஜனாதிபதி நடந்துக் கொள்ள வேண்டும்.


யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »