Our Feeds


Saturday, May 10, 2025

ShortNews

ரிஸ்வி சாலி தான் சபாநாகராக பதவி வகிக்க வேண்டும்! - SJB MP கோரிக்கை

 


பிரதி சபாநாயகர்  ரிஸ்வி சாலி  இந்த பாராளுமன்றத்தில் 

சபாநாயகராக பதவி வகிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.சட்டம், பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்கு அமைய அவர் நடுநிலையாக செயற்படுகிறார் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிறி சபைக்கு தலைமை தாங்கிய  பிரதி சபாநாயகரை  நோக்கி குறிப்பிட்டார்.


பாராளுமன்றத்தில்   வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற  முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை குறைத்தல் தொடர்பான தனிநபர்  பிரேரணை மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,


பிரதி சபாநாயகர்  சட்டம், பாராளுமன்ற சிறப்புரிமை  தொடர்பில் நன்கு அறிந்து நடுநிலையான வகையில் செயற்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.இந்த பாராளுமன்றத்தில் அவர் சபாநாயகராக   பதவி வகிக்க  வேண்டும் என்று   பிரார்த்திக்கிறேன்.


முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின்  சிறப்புரிமைகளை ஆட்சிக்கு  வந்தவுடன்  இரத்துச் செய்வதாக  அரசாங்கம் நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பிட்டு வெறுப்பை தூண்டி விட்டது. ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்  இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.


மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டு அரசாங்கம் செயற்படுகின்ற நிலையில் தான்  உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மக்கள் அரசாங்கத்தக்கு தகுந்த பாடத்தை கற்பித்துள்ளார்கள். அரசாங்கம் இதனை சிறந்த படிப்பினையாக கொள்ள வேண்டும்.


தேர்தல் காலத்தில் செயற்பட்டதை போன்று தற்போதும்  வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்பட அரசாங்கம் முயற்சிக்கிறது. முன்னாள்  ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்கு ஏன் எவ்வித  நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை.


இவ்வாறான நிலையில் தான் எதிர்க்கட்சியால் இந்த பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே இந்த தனிநபர் பிரேரணை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »