Our Feeds


Monday, June 16, 2025

Sri Lanka

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க அரசாங்கம் தீவிர முயற்சி!


உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் கொழும்பு மாநகர சபையில் ஆட்சி செய்ய  எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் ஏனைய கட்சிகளி்ல் ஆதரவை பெற்றுக்கொண்டு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு அரசாங்கம்  தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதேபோன்று எதிர்க்கட்சியில் அதிக ஆசனங்களை பெற்ற  கட்சி என்றவகையில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கு முயற்சித்து வருகிறது.

ஒரு மாதத்துக்கும் அதிக காலமாக இதுதொடர்பாக இந்த இரண்டு கட்சிகளும் தாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போவதாக தெரிவித்துவரும் நிலையில், யார் ஆட்சி அமைக்கப்போகிறது என்ற கேள்விக்கு திங்கட்கிழமை (16) விடை கிடைத்துவிடும். மேயரை தெரிவு செய்வதற்காக கொழும்பு மாநகர சபை இன்று காலை மாநகர ஆணையாளர் தலைமையில் கூடுகிறது.

உள்ளூராட்சி மன்ற  தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மொத்தமாக 117 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் தேசிய மக்கள் சக்திக்கு 48 ஆசனங்களும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு 29 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றன. ஏனைய கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு மொத்தமாக 40 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன் பிரகாரம் ஆட்சி அமைப்பதற்கு   59 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாதுள்ளது. இந்நிலையில், கொழும்பு மாநகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.

ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்தவரை, கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்டு ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் ஆதரவை கோரி இருப்பதுடன் சுயேட்சை குழுக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருப்பதாகவும் அவர்களின் ஆதரவு நிச்சயமாக கிடைக்க இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

அதேநேரம் கொழும்பு மாநகர சபையில் எதிர்க்கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக  13 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி, 5ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன, 1ஆசனம் பெற்றுக்காெண்டுள்ள பொதுஜன ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன. 4ஆசனங்களை பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவும் எதிர்க்கட்சிக்கே வழங்கும் என்றே தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மாநகர சபைக்கு போட்டியிட்ட சுயேட்சை குழுக்களுக்கு  மொத்தமாக  9 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 3 பேர் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்திருக்கின்றனர். ஏனையவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள பிரதான இரண்டு கட்சிகளும் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளும் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதற்காக ஏனைய கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு இரகசிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.

அதேநேரம் ஆளும் தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு அவர்களுக்கு இன்னும் 8 ஆசனங்களே தேவைப்படுகின்றன.  எவ்வாறு இருந்தபோதும் கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதாகவும் அதற்கு ஆதரவளிப்பதற்கு பலரும் உறுதியளித்திருப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு  கொழும்பு மாநகர சபையை யார் ஆட்சி அமைக்கப்போகிறது என்பது யாராலும் உறுதியாக தெரிவிக்க முடியாமல் இருக்கிறது. என்றாலும் இதற்கான தீர்வு இன்று கிடைத்துவிடும். கொழும்பு மாநகரசபை திங்கட்கிழமை (16) காலை  9.30 மணிக்கு மாநகர ஆணையாளர் தலைமையில் கூடுகிறது. 

இதன்போது, மேயர் தெரிவுக்கு வாக்களிப்பு இடம்பெறும். இதன்போது தேசிய மக்கள் சக்தி, ராய் பல்தசாரை பிரேரிக்க இருப்பதுடன் எதிர்க்கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரிஸா சரூக்கை பிரேரிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் யார் அதிக வாக்குகளை பெற்று மேயராக தெரிவாகப்போகிறார் என்பதை பொறுத்திருந்து  பார்ப்போம். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »