Our Feeds


Sunday, June 15, 2025

SHAHNI RAMEES

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் பலத்த கண்டனம்!

 


ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மீது தொடர்ச்சியான

வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்துவருவது கண்டிக்கத் தக்கது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,


சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை,கோட்பாடுகளுக்கு விதிவிலக்காக நடந்து கொள்ளும் வன்முறைக்  கலாசாரத்திலிருந்து தோன்றிய நெதன்யாகு அரசாங்கம், ஜூன் 13, 2025 அன்று ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது முற்றிலும் நியாயமற்ற மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.


இது ஈரானை ஸ்திரமற்ற தன்மைக்கு  உள்ளாக்கவும், மத்திய கிழக்கு மற்றும் பரந்துபட்ட அந்தப் பிராந்தியத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தவும்  திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் அப்பட்டமான முயற்சியாகும்.



இஸ்ரேலினால் அதற்கு ஆதரவான நாடுகளின்  ஒத்துழைப்புடன்  ஈவிரக்கமற்ற முறையில் செயல்படுத்தப்படும் இந்தக் கொடூரமான செயலை நாங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


இவ்வாறான அடர்ந்தேற்றத்திற்கும், ஆக்கிரமிப்பிற்கும் எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான முழு உரிமையும் ஈரானுக்கு உண்டு. காசாவிலும் , மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் பாலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்கு பொறுப்பான நெதன்யாகு மற்றும் அவரது இனப்படுகொலைக்  கும்பலின் கொடூரமான போக்கை எந்தவொரு நாடாவது  கண்டுகொள்ளாது போல நடந்து கொள்வது  உலகளாவிய அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் மிகவும் குந்தகமானதும்,  ஆபத்தானதுமாகும்.


ஈரானுக்கும் ,உலகின் எந்த நாட்டிற்கும்  அணுசக்தியை உரிய முறையில் கையாள்வதற்கான உரிமை உண்டு.  ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாகும், மேலும் அது சர்வதேச அணுசக்தி அதிகார சபையின் பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.


எந்தக் காரணத்திற்காகவும், இராஜதந்திர ரீதியான  பேச்சுவார்த்தைக்கான நெறி முறைகளை மீறி,  எந்தவொரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டிற்கு எதிராக ஒருதலைப்பட்சமாக எவ்வாறான யுத்த நடவடிக்கையையும் தன்னிச்சையாக மேற்கொள்வதற்கு அறவே அதிகாரம் இல்லை.


முழு மத்திய கிழக்கையும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய அணு ஆயுதங்கள்  உட்பட , பயங்கர ஆயுதங்கள் அற்ற பிராந்தியமாகப் பிரகடனப்படுத்த வேண்டுமென்றும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின்  சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் நாங்கள் கோருகின்றோம்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »