கல்வி குறித்த விவாதத்தை உயர் மட்டத்திலான தரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு வெள்ளை அறிக்கை அவசியமாக காணப்படுகிறது. என்றாலும், அத்தகைய வெள்ளை அறிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை. பிரித்தானிய பாராளுமன்ற முறைமையின் பிரகாரம், ஆரம்பத்தில் பச்சை அறிக்கை முன்வைக்கப்படும். பின்னர் ஒரு வெள்ளை அறிக்கை தயாரிக்கப்படும். கல்விச் சீர்திருத்தங்களை வலுவாகவும் வினைதிறனாகவும் முன்னெடுத்துச் செல்ல இதுபோன்ற ஒரு வெள்ளை அறிக்கை மிகவும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி இது தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கையைத் தயாரித்து, ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போதும், பின்னர் வந்த தேர்தலிலும் முன்வைத்தது, சமூக இணக்கப்பாட்டை எட்டிக்கொண்டது. அரசாங்கம் Power Point முன்வைப்பைத் தாண்டி ஒரு வெள்ளை அறிக்கையை முன்வைக்கும் பட்சத்தில், அதன் ஊடாக சிறந்த கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் முற்போக்கான கல்விச் சீர்திருத்தத்தை நோக்கிச் செல்ல முடியுமாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தம் என்பது காலத்தின் அவசியமாகும். அது நிகழும்போது, குறித்த இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் எவ்வாறு அடைவது என்பது குறித்த தெளிவான புரிதல் காணப்பட வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையுடன் செயல்படுத்தப்பட வேண்டும். எந்தவொரு செயல்முறையும் ஒழுங்கற்ற முறையில் தொடங்கினால், அதன் முடிவு வெற்றிகரமான ஒன்றாக அமையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று நாட்டில் காலாவதியான, பழைய முறைகளைப் பின்பற்றும், பாரம்பரிய கட்டமைப்பிற்குள் மட்டுண்ட கல்வி முறையே காணப்படுகிறது. இது நம் நாட்டு மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். கல்வி என்பது மனித உரிமையும் அடிப்படை உரிமையும் ஆகும். தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தால், நலன்புரி பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களான கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், வாழும் உரிமை, பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், மதம் மற்றும் அரசியல் போன்ற உரிமைகள் மனித மற்றும் அடிப்படை உரிமைகளாக அமையும் விதமாக இருக்க வேண்டும். தற்போதைய கல்வி முறைமை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக இன்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கல்வியை ஸ்மார்ட்டான ஒன்றாக மாற்றும் போது ஸ்மார்ட் மாணவர், ஸ்மார்ட் இளைஞன், ஸ்மார்ட் குடிமகன், ஸ்மார்ட் நாடு உருவாகும். கல்வியில் வழக்கமான மனப்பாடம் செய்யும் கற்றல் முறையை இல்லாதொழித்து, நாடும் உலகமும் எதிர்கொண்டு பன்முக பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய குடிமக்களை உருவாக்க வேண்டும். நமது நாட்டின் கல்வித்துறையில் தகவல் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும். விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், ஆங்கிலம், கலை மற்றும் கணிதம் ஆகிய துறைகளை நோக்கிச் செல்ல வேண்டும். ஆங்கில மொழியை மையமாகக் கொண்ட கல்வி சகல பாடசாலை கட்டமைப்பிலும் முன்னெடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
