மீன்பிடித் துறையின் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகள் வழங்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில், மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமைச்சு வளாகத்தில் நேற்று (25) நடைபெற்றது.
இதில் அமைச்சு செயலாளர் கலாநிதி பி.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் அபுபக்கர் ஆதம்பாவா, அர்கம் இல்யாஸ், ரொஷான் அக்மீமன, மாவட்ட மீன்பிடி பிரதிநிதிகள் மற்றும் காப்புறுதி நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மீன்பிடி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறை:
கடல் அட்டைகள், சங்குகள், இறால்கள் மற்றும் அலங்கார மீன்களைப் பிடிப்பதற்கான சுழியோடிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் இங்கு அறிவித்தது.
அக்டோபர் 30ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும், விண்ணப்பதாரர்களின் அனுபவம், படகின் உரிமை மற்றும் காப்புறுதி போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நேர்காணலுக்குப் பின்னர் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கப்பல் கண்காணிப்பு அமைப்பு (VMS) மற்றும் கட்டண திருத்தம்:
மீனவர் சமூகத்திடம் இருந்து கிடைத்த கோரிக்கைகளை பரிசீலித்து, VMS கருவிகளுக்கான மாதக் கட்டணத்தை இணக்கப்பாட்டுடன் கூடிய ஒரு நிலைக்குக் குறைக்க தொடர்புடைய நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே இங்கு தெரிவத்தார். மேலும், மூன்று மாதங்களுக்கு மேல் செயலிழந்திருக்கும் படகுகளுக்கான VMS கட்டணத்தை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
படகு கணக்கெடுப்பு:
ஆகஸ்ட் 4-20 வரை நாடு தழுவிய மீன்பிடி படகு கணக்கெடுப்பு நடைபெறும். கணக்கெடுப்பில் பங்கேற்காத படகுகளின் இயக்க அனுமதி புதுப்பிக்கப்படாது.
மீனவர் காப்புறுதி:
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மூலம் மீனவர்களுக்கு உயிர், சொத்து பாதுகாப்பு, மருத்துவம், கல்வி செலவுகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் வலுப்படுத்தப்படும். விழிப்புணர்வு பரப்பப்பட வேண்டும் என செயலாளர் கலாநிதி ஜினதாச வலியுறுத்தினார்.
மீனவர் சங்கங்கள்:
செயலிழந்த மீனவர் சங்கங்கள் மீள்செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, பயிற்சி மற்றும் கடன் வசதிகள் வழங்கப்படும்.
பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்தக் கூட்டம் மீன்பிடித் துறையை மேம்படுத்துவதற்கு முக்கிய படியாக அமையும் என்றும், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் துறையின் வளர்ச்சிக்கு அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
