Our Feeds


Thursday, August 7, 2025

Zameera

7 ஆண்டுகளுக்குப் பிறகு அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது


 அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுவது விசேட அம்சமாகும்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின்படி அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை நிறுவப்பட்டது. இந்த சபை இறுதியாக 2018 ஏப்ரல் 05 ஆம் திகதி கூடியது.

அனர்த்த முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட பங்கை முறையாகக் கண்காணித்தல், நாட்டில் அனர்த்த அபாயத்தைக் குறைத்தல் மற்றும் தேவையான கொள்கை முடிவுகளை எடுத்தல் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கு இந்த சபையின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.

இந்த முகாமைத்துவச் சபை தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் அனர்த்த முகாமைத்துவ மையத்தை ஒருங்கிணைக்கவும் வசதிகள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கிறது. இந்த அமர்வில் அனர்த்த முகாமைத்துவத் திட்டங்கள் மற்றும் தேசிய அவசரகால செயல்பாட்டுத் திட்டம் ஆகியவை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இலங்கையில் அனர்த்தங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புதிய போக்குகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. மேலும் இந்த நடவடிக்கைகளுக்கான மைய செயல்பாட்டுடன் கூடிய ஒற்றை அமைப்பின் தேவை தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.

இலங்கை வேலை வாய்ப்பு

தற்போதைய காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு அனர்த்த முகாமைத்துவம் செயற்திறனுள்ளதாக்குவதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு புதிய சவால்களை எதிர்கொள்வதற்கும் தற்போதைய சட்டத்தை காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திருத்த வேண்டும் என்று குழு முடிவு செய்தது.

அத்தோடு,அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான தற்போதைய நிதி வரம்புகளை திருத்துதல், தற்போது நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகள் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை புதுப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான நிதியமொன்றை நிறுவவும் முன்மொழியப்பட்டதோடு இதற்கு சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அனர்த்தத்தை எதிர்கொள்ளக் கூடிய வீடுகளை அடையாளம் காண்பதை விரைவுபடுத்தவும், அந்த வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றவும், அவர்களின் பாதுகாப்பை ஆராயவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்தார்.

இடம்பெயர்வு முகாம்களில் தொடர்ந்தும் இருக்கும் மக்கள் குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கவனம் செலுத்தியதோடு பதுளை பூனாகலையைச் சேர்ந்த 58 குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்வு முகாம்களில் இருப்பதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 58 குடும்பங்களை மீள்குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி ஜே.எம். கபில ஜெயசேகர தெரிவித்தார்.

இந்த சபையின் தலைவராக ஜனாதிபதியும் உபத தலைவராக பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் (அல்லது அவர்கள் இல்லாதவிடத்து ஆளுநர்கள்) மற்றும் பாராளுமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள்/ நிபுணர்கள் ஐவர் உள்ளடங்குகின்றனர். தேவைக்கேற்ப ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமைச்சர் ஒருவரை சபைக்கு இணைக்க முடியும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா இந்த சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் அனர்த்த முகாமைத்துவ சபை உறுப்பினராக அவர் செயற்படுவார்.

சபைக்கு 15 பிரதான பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கொள்கையை தயாரிப்பதும் அடங்குவதோடு அது ஏற்கனவே தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உயிர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகள்,பொதுமக்களுக்கான விழிப்புணர்வு, பயிற்சி வழங்கல் மற்றும் நிவாரணம் வழங்கல் போன்ற அனைத்து அம்சங்களும் இந்த கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பொது நிர்வாக , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி கிருஷாந்த அபேசேன, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, தேசிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »