Our Feeds


Sunday, August 10, 2025

Zameera

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை பொழுதுபோக்கு நிகழ்ச்சி போல் உள்ளது - இராதாகிருஷ்ணன் எம்.பி




 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கும் அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கும் பேச்சுவார்த்தை தற்போதைய அரசாங்கம் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாகவே எடுத்துக்கொண்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


இன்று (10) நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தற்போதைய ஜனாதிபதி மேதின கூட்டத்திலும் சரி பாராளுமன்றத்திலும் மற்றும் பல்வேறு பொது கூட்டங்களில் கலந்துகொண்டு சம்பள அதிகரிப்பை பற்றி பேசினாலும் இன்று வரை அது கைகூடவில்லை.


பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் இராஜதுரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் மாத்திரமே வேதன அதிகரிப்பொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அல்லது மீண்டும் அரசுக்கு தோட்டங்களை கையளிக்க வேண்டும் என அலட்சியமான பதில்களை தெரிவிக்கின்றனர் .


தற்போது சாதாரண அரிசி ஒரு கிலோ 250 ரூபாவை கடந்து போகின்ற இந்நிலையில், எமது தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றன.


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,350 ரூபாவை அடிப்படை சம்பளமாக மாத்திரம் வழங்க சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் தீர்மானித்து வழங்கி வருகிறது, அத்துடன் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்ட 1,700 ரூபா சம்பளம் தமக்கு வழங்கப்படவில்லை என பல பெருந்தோட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவித்து வருகின்றதும் தொடர் கதையாகவே உள்ளது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார் .


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »