Our Feeds


Sunday, August 24, 2025

Zameera

தபால் ஊழியர்களுக்கும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையே இன்று (24) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இன்று காலை இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தபால் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தம் இன்று 7வது நாளாகவும் தொடர்கிறது.

வேலைநிறுத்தம் தொடங்கியதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தபால் சேவைகளைப் பெற வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இருப்பினும், இந்த விடயம் குறித்து இன்று அமைச்சருடன் கலந்துரையாட தயாராக இருப்பதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

இதற்கிடையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பல உறுப்பினர்கள் தற்போது சேவை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளதால், நாளைக்குள் தபால் சேவைகளை வழக்கம் போல் மேற்கொள்ள முடியும் என்று இலங்கை தபால் சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »