முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான அனைத்து குடியிருப்புகளையும் அரசாங்கம் திரும்பப் பெறும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது, முன்னாள் தலைவர்களுக்கு ஆடம்பர அரச குடியிருப்புகளை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் மேலும் கூறினார்.
தேசிய பிக்கு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய சட்டம் செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்டவுடன், பொதுச் சொத்தைக் கொள்ளையிட்டு வீணாக்கும் அரசியல் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஒருபோதும் பின்வாங்கப்படாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் சட்டம் அனைத்து குடிமக்கள் மீதும் சமமாக அமுல்படுத்தப்படும் எனவும், ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கு எதுவாக இருந்தாலும், கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
