Our Feeds


Monday, August 18, 2025

SHAHNI RAMEES

ஒட்டுச்சுட்டான் இளைஞன் உயிரிழப்பு : விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் - இராணுவப் பேச்சாளர்

 

ஒட்டுச்சுட்டான் பிரதேச இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை. பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  ஞாயிற்றுக்கிழமை (17) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


இராணுவ முகாமிற்குள் சில தரப்பினர் அனுமதியின்றி பிரவேசிக்க முற்பட்டமையே இந்த சம்பவத்துக்கான அடிப்படை காரணியாகும். இவ்வாறு உட்பிரவேசித்தவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் அவர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த நபர் தொடர்பில் இதற்கு முன்னரும் அதாவது ஜனவரி 18ஆம் திகதி இதே முகாமிற்குள் நுழைந்து பொருட்களை திருடியமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

7ஆம் திகதி சம்பவம் இடம்பெற்ற போதிலும், 8ஆம் திகதியே முத்தையங்கட்டு வாவியில் நபரொருவரின் சடலம் காணப்படுவதாக அறியக்கிடைத்தது. பின்னர் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் பரிசோதனைகளையடுத்தே இந்த நபர் முதல் நாள் முகாமுக்குள் பிரவேசித்தவர்களில் ஒருவர் எனத் தெரியவந்தது.


அதற்கு முன்னர் இராணுவத்தில் எவரும் இது தொடர்பில் அறிந்திருக்கவில்லை. எவ்வாறிருப்பினும் இந்த தகவல் கிடைத்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய இந்த மரணத்துக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை. பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினையும் வழங்குகின்றோம்.

அதேபோன்று எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கும் நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »