Our Feeds


Tuesday, September 30, 2025

Sri Lanka

மன்னாரில் அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது - அருட்தந்தை சத்திவேல்!


இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதன் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று அதிகாரத்தை காலடியில் மிதித்து மக்களை அவமதித்துள்ளதோடு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டம் நடத்திய மக்களை பொலிசார் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டமை அரசாங்கத்தின் அடாவடி கோர முகத்தினையும், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் தமிழர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தங்களை கிழித்து எறிந்தமைக்கு ஒப்பான செயலுமாகும். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மக்களுக்கான ஆட்சி தொடர்பில் சர்வதேச மன்றிலிருந்து உலகத்துக்கே பாடம் எடுக்கும் இலங்கை ஜனாதிபதி தனது சொந்த நாட்டில் தமது தேர்தல் பிரச்சார மேடைகளில் "மக்களின் விருப்பின்றி எந்த அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ள மாட்டேன்" என்று கூறியதை நிறைவேற்றாது அராஜகம் புரிவதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இது இன அழிப்பின் இன்னுமொரு வடிவமாகும்.

இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும். மக்களை அவர்களின் வாழ் நிலங்களில் இருந்தும், தொழில்கள் இருந்தும் அகற்றி அந்நிலத்தினை அவர்களிடமிருந்து பறித்து முதலாளித்துவ சக்திகளுக்குத் தாரை வார்ப்பது எந்த வகையில் நியாயம்? இதுவா இடதுசாரி கொள்கை? இதற்காகவா தமிழ் மக்களும் தேசிய சக்திக்கும் ஜனாதிபதிக்கும் வாக்களித்து அதிகார பதவியில் அமர்த்தினார்கள்?

அன்று யுத்தகாலத்தில் தமிழர் தேசத்தின் வளமான இல்மனைட் சுரண்டப்பட்டு கப்பலில் ஏற்றி சென்ற போது தமிழர்களின் படைப்புலமும் ஆயுதமும் அதனை தடுத்து நிறுத்தியது வரலாறு .யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கனியவளம் மட்டும் அல்ல தமிழர்கள் நிலத்தை அபிவிருத்தி எனும் போர்வையில் அன்னிய சக்திகளுக்கு கொடுக்க முனைவதும், அதனை அமைதி வழியில் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை தாக்குவதும் மீண்டும் பழைய நிலையை தோற்றுவிக்கவா? என்றும் கேட்கத் தோன்றுகின்றது.

தமிழர்கள் முன் வைக்கும் யுத்த குற்றங்களுக்கான நீதிக்கு அப்பால் அரச பயங்கரவாத படையினர் பலவந்தமாக கட்டிய விகாரைக்கு இதுவரை நீதி கிட்டவில்லை. கிழக்கின் மயிலத்தமடு மாதவனை பண்ணை பணியாளர்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்கவில்லை. மன்னார் காற்றாலை மற்றும் கனியவளம் அகழ்வு தொடர்பில் உறுதியளித்த நீதியை மறுப்பதும் தமிழர்களுக்கு எதிரான அழிப்பே. தற்போதைய ஆட்சியாளர்களும் கடந்த காலத்தைப் போன்று சிங்கள பௌத்த பேரினவாத மனநிலையிலேயே ஆட்சியை தொடர்கின்றனர் என்பதனை அண்மைய சம்பவங்கள் உறுதி செய்கின்றன.

தற்போது தமிழர்கள் முகம் கொடுக்கும் சவால்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தெற்கின் முற்போக்கு அரசியல் முகம் கொண்ட அரசியல் கட்சி ஒன்று தமிழர்களின் அரசியலை ஆக்கிரமிக்க தமிழர் தாயகத்தில் களம் இறங்கி உள்ளது. தீர்வுக்கு பக்க பலமாக இருப்பதாகவும் அதற்கான போராட்டங்களை தலைமை தாங்கி முன்னெடுப்பதாகவும் காட்டி நிற்பது தமது கட்சி அரசியலை தமிழர் தாயகத்தில் பலப்படுத்தவே. மீண்டும் ஒரு முறை விட்டில் பூச்சிகளாகி எம்மை நாமே அழித்துக்கொள்ளக் கூடாது என அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம். தமிழ் அரசியல் தலைமைத்துவங்களும், சிவில் சமூக அமைப்புகளும், அரசியல் வழிகாட்டிகளாக தம்மை அடையாளப்படுத்தி கட்டுரை வரைபவர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் இது.

தமிழர் பாதுகாப்புக்கான கோரிக்கைகளை முன் வைத்து 38 ஆண்டுகளுக்கு முன் தியாகியான திலீபனுக்கு சுடர் ஏற்றிய நாளின் இரவில் தான் மன்னார் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இதனை சாதாரண ஒரு நிகழ்வாகவோ, மன்னார் போராட்டக்காரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகவோ கணிக்க முடியாது. என்றும் உயிர்ப்புடன் உள்ள திலீபனின் அரசியல் கோரிக்கைகளுக்கு எதிரான தாக்குதலாகவே நாம் கொள்ளல் வேண்டும்.

தமிழர்களின் தீர்க்கப்படாத அரசியல் பிரச்சனையை சர்வதேச மட்டத்தில் நீர்துப்போக செய்யவும், தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த சர்வதேச போர் குற்றங்களுக்கான நீதியை உள் நாட்டு விசாரணை பொறிமுறைக்குள் முடக்கவும் சிங்கள பௌத்தத்தின் நீதியை திணிக்கவும் ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்களின் பலத்துடன் தான் முறியடிக்க முடியும். இனியும் காலம் தாமதிக்க முடியாது.

ஆதலால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், திலீபன் உயிர் கொடையான நாள், மாவீரர் நாள் என்பவற்றையும் தமிழர்களின் அரசியலுக்காக வித்தானோரையும் மையப்படுத்திய அரசியல் செயற்பாடு நிறைந்த வழித்தடமாக்கி தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக செயல்படும் அனைத்தும் தரப்பினரும் தமிழர் தாயக அரசியலுக்காக உயிர் கொடையானவர்களின் அரசியலோடு பயணிக்க திடசங்கற்பம் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »