மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் ஏற்படும் தாமதங்களைத் தடுத்து, அவற்றின் நன்மைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மக்களுக்கு வழங்குவது, மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில் இன்று (06) பிற்பகல் நடைபெற்ற மொனராகலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஒரு அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும் போது, அது நிறைவடையும் வரை இலக்கு மயப்பட்ட திட்டத்தை அவர்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவு செய்யத் தவறியதாலும், அவற்றின் திட்டக் காலங்களை நீடித்து, மதிப்பிடப்பட்ட செலவை அதிகரித்ததால், அந்த திட்டங்களின் நன்மைகளையும் முதலீடு செய்த நிதியின் பிரதிபலன்களையும் நாடு இழந்துள்ளது.
இந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் உரிய நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மொனராகலை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்காக பல்வேறு அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
மக்களுக்கு அவசியமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு எந்தவொரு நேரத்திலும் நிதி ஒதுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, திறைசேரியின் நிதி, கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமாயின் கிராமப்புற அபிவிருத்தித் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கொடியாகல மற்றும் கெபிலித்த வனப்பகுதிகளின் எல்லை நிர்ணயம் காரணமாக விவசாய நிலங்களை இழந்த விவசாயிகளின் பிரச்சினை குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், விவசாயிகளின் விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை வகுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
