இன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துகொண்டபோதும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளாதது பெரும் வேதனையளிப்பதோடு, அது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கம்பனியின் வளர்ச்சிக்காக தோட்டங்களில் முழுமையாக பாடுபடும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொடர்ந்தும் தான்தோன்றித்தனமாக செயற்படும் கம்பனிகளை கடுமையாக கண்டிப்பதாக செந்தில் தொண்டமான் கூறினார்.
மேலும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. கம்பனிக்கு எதிராக போராட்டம் நடத்தி தான் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் அதற்கும் இ.தொ.கா தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழில் அமைச்சின் முயற்சி வரவேற்கத்தக்கது எனவும் அம்முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
