கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் பாகிஸ்தான் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக நேற்று (26) சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவை ஆதாரமற்ற வதந்திகள் என்றும் அடியாலா சிறைச்சாலை அறிக்கை வெளியிட்டது.
இம்ரான் கான் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை நிராகரித்து, நேற்றை தினம் சிறைச்சாலை வெளியிட்ட அறிக்கையின் ஊடாக, இம்ரான்கான் சிறைக்குள்தான் இருக்கிறார், அவர் வேறு எங்கும் மாற்றப்படவில்லை, அவர் தொடர்ந்து முழுமையான மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளதாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ், பாகிஸ்தான் டுடே முதலிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் கடந்த 2023ம் ஆண்டு முதல் அந்நாட்டின் ராவல்பிண்டி அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், சில நாட்களாக இம்ரான்கானை சந்திக்கச் சென்ற அவரது மூன்று சகோதரிகள் மற்றும் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (PTI) கட்சித் தொண்டர்களை சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
