(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம் கொழும்புக்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெகுஜன ஊடகத்துறை மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மக்களின் தகவல் அறியும் உரிமையை பாதுகாத்து ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசிலுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர்களுக்கு உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக நிவாரண அடிப்படையில் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு அதற்காகவும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம் கொழும்புக்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
புதிய ஊடகக் கொள்கை சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவரும் சபையில் குறிப்பிட்டிருந்தார். அது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதுடன் அதற்கான வசதிகளை ஊடகத்துறை அமைச்சு வழங்கி வருகின்றது. மேலும் தபால் அமைச்சர் விடயம் பெரிதாக பேசப்படும் விடயம் அல்ல எனினும் 28 வருட வரலாற்றைக் கொண்ட தபால் துறை இந்த நாட்டின் பெரும் சொத்தாகும்.
நாடளாவிய தபால் நிலையங்கள் மூலம் மக்களுக்கான பாரிய சேவைகள் வழங்கப்படுகின்றன. 49 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு இலவசமான சேவைகளை அந்த திணைக்களம் வழங்குகின்றது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு அடுத்த மாதத்தில் அவற்றை மக்கள் பயன்களுக்காக கையளிக்கப்படவுள்ளன. மேலும் புதிய தபால் நிலையங்கள் பல நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
தபால் திணைக்களத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை, பதவி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெற்றிடங்களை நிரப்புவதற்கானநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு பொரளையிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையை முன்னேற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் அதன் பிரதி பலன்களை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன் வழக்கு கிழக்கில் பல ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக தேவைப்படும் கட்டிடங்களுக்கு எதிர்காலத்தில் நிதி ஒதுக்கப்படும் என வெகுஜன ஊடகத்துறை மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
