Our Feeds


Monday, November 10, 2025

Sri Lanka

“நாங்கள் நெத்தலிகளை அல்ல, சுறாக்களைப் பிடித்துள்ளோம்” – அமைச்சர் சுனில் வட்டகல!




போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு தான் எதிர்தரப்பினர் ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். யுக்திய சுற்றிவளைப்பில் நெத்தலி மீன்களை பிடித்ததை போன்று நாங்கள் செயற்படவில்லை. சுறாக்களை பிடித்துள்ளோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.


மஹரகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,



கடந்த அரசாங்கங்களின் ஆசிர்வாதத்துடன் போதைப்பொருள் வர்த்தகம் நகரம் முதல் கிராமம் வரை முன்னெடுக்கப்பட்டது. பாதாளக் குழுக்களை ஆட்சியாளர்கள் பாதுகாத்தார்கள். இதன் விளைவை இன்று முழு நாடும் எதிர்கொள்கிறது.



தமது பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவதை எந்த பெற்றோரும் விரும்புவதில்லை. போதைப்பொருள் ஒழிப்புப்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பெற்றோர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள். பாதாள குழுக்களுக்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அரசியலமைப்பு சர்வாதிகாரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைகிறார்கள்.


ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்தால் மாத்திரம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.



போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு  2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.



முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் யுக்திய சுற்றிவளைப்பினை மேற்கொண்டார்.இந்த சுற்றிவளைப்பில் நெத்தலி மீன்கள் மாத்திரமே அகப்பட்டன. சுறாக்கள் அரசியல்வாதிகளின் கட்டளைக்கு அமைய பாதுகாக்கப்பட்டன.



போதைப்பொருள் வியாபாரத்தில் பிரதான நபர்களாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் செயற்பட்ட சுறாக்களை நாங்கள் கைது செய்துள்ளோம். போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »