(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளத்தை முடிந்தால் அதிகரியுங்கள் என்று குறிப்பிட்டதற்கு நான் ஏன் பதவி விலக வேண்டும். பதவி விலகுமாறு குறிப்பிடுவதற்கு எவருக்கும் தார்மீக உரிமை கிடையாது. பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரசுரிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (08) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எனது நண்பரான பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் தந்தை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு இந்த உயரிய சபையில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மலையக பிரதிநிதி ஒருவர் சபையில் இருந்தார். அவரை சபையில்இருக்க சொன்னேன்.
ஆனால் அவர் சென்று விட்டார்.ஜனாதிபதியை விமர்சித்து உரையாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. வரவு - செலவுத் திட்டத்தில் சிறந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை நாங்கள் வரவேற்கிறோம். இரவு நேர செய்திகளில் வர வேண்டும் என்பதற்காக ' ஜீவன் தொண்டமான் பதவி விலக வேண்டும் ' என்று ஆளும் தரப்பின் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். பிறிதொரு உறுப்பினரை பதவி விலகுமாறு குறிப்பிடுவதற்கு எவருக்கும் தார்மீக உரிமை கிடையாது.
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.இதில் என்ன தவறு உள்ளது. அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதாக தோட்ட கம்பனிகள் ஆரம்பத்தில் குறிப்பிடுவார்கள் .இறுதியில் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க முடியாது. வருகை கொடுப்பனவை மாத்திரமே அதிகரிப்பதாக குறிப்பிடுவார்கள்.
கருத்து தெரிவித்ததற்காக நான் ஏன் பதவி விலக வேண்டும். அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியது ஆனால் எதனையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறான நிலையில் ஏன் நான் பதவி விலக வேண்டும்.இவ்வாறான நாகரீகமற்ற தர்க்கங்களில் நான் ஈடுபடபோவதில்லை. சம்பள அதிகரிப்புக்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம்.இந்த சம்பள அதிகரிப்பை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் நாளுக்கு நாள் குறைவடைந்துச் செல்கிறது.இந்த விடயத்தை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும். தோட்ட கம்பனிகள் வழங்கும் வாக்குறுதிகளுக்கு அமைய செயற்படுவதில்லை என்றார்.
