விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் களனி ஆற்றின் வெள்ளத் தடுப்பு அணை உடைந்து போகும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என சம்பந்தப்பட்ட துறைகள் அறிவித்துள்ளன.
விக்டோரியா நீர்த்தேக்கம் உடையும் அபாயம் உள்ளதாகத் தற்போது பரப்பப்படும் செய்திகள் உண்மையற்றவை என விக்டோரியா மின்நிலையத்தின் பிரதம பொறியியலாளர் ஜீ.டி.ஐ. சாந்த தெரிவித்துள்ளார்.
பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், விக்டோரியா மின்நிலையத்தில் மின் உற்பத்திப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், தானும் ஊழியர்களும் அங்கு தங்கியிருந்து செயற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் "களனி ஆற்றின் தெற்கு கரையில் உள்ள வெள்ளத் தடுப்பு அணை உடையும் அபாயம் உள்ளது" என்ற செய்தி முற்றிலும் பொய்யானது என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறான சீரற்ற வானிலை நிலவும் இக்கட்டான சூழ்நிலையில், இத்தகைய பொய்யான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், இச்செய்திகள் மூலம் பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
