Our Feeds


Tuesday, November 25, 2025

SHAHNI RAMEES

NBRO பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய பின்னரே கடுகன்னாவ வீதியை மீண்டும் திறக்க முடியும்!

 

கீழ் கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வு செய்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அப்பகுதிக்கு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிரந்தரத் தீர்வுகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 

கேகாலை மாவட்டச் செயலாளர், மாவனல்லை பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய பின்னரே வீதியை மீண்டும் திறக்க முடியும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக தெரிவித்துள்ளார். 

எனினும், தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக இந்தப் பணிகளைச் செய்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் இன்று (25) ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். 

இந்த பகுதியில் பௌதிக அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வது கடினம் என்பதால், லிடார் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு அளவீடுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

அதன் அடிப்படையில், அந்த இடத்தை நீண்ட காலத்திற்கு நிலைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரிக்கும் பணி நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில், இந்த நீண்ட கால நிலைப்படுத்தும் பணிகளைத் திட்டமிட்டு, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடிச் செயற்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் சிரேஷ்ட புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக மேலும் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »