"காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் உடனடியாக நடாத்தப்பட வேண்டும். கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்
கந்தசாமி பிரபுவிடம் வேண்டுகோள்"
ஏழாவது நகரசபை அமர்வில் என்னால் சில விடயங்கள் முன்வைக்கப்பட்டது. அவற்றில் குறிப்பாக கடந்த பல மாதங்களாக காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நடாத்தப்படாது காலம் தாழ்த்தப்படுவது தொடர்பாக என்னால் முன்வைத்து பேசப்பட்ட விடயம் தொடர்பாக கெளரவ தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் சகிதம் விரிவாக கலந்துரையாடப்பட்டு, காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தை உடனடியாக கூட்டுவதற்கு பிரதேச அபிவிருத்தி குழுதலைவரான கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களை கோருவதென தீர்மானம் எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களில் காத்தான்குடி தவிர்ந்த ஏனைய பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு கூட்டம் காலம் தாழ்த்தாது இடம்பெற்றாலும் எமது காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் மாதங்கள் தாண்டியும் நடைபெறாமையினால், எமது நகரசபையினால் பிரதேச அபிவிருத்தி குழுவின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கடந்த வெள்ள அனர்த்த பாதிப்புகள் மற்றும் அதற்காக அரசு அறிவித்த நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைவதிலுள்ள உள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ள சந்தர்ப்பமும் இங்கு காலம் தாழ்தப்படுவதும் குறி்ப்பிடத்தக்கது.
இ.எம்.றுஸ்வின் LL.B
நகரசபை உறுப்பினர்
காத்தான்குடி.
25.12.2025
