Our Feeds


Tuesday, December 9, 2025

Zameera

நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி விநியோகத்தில் பற்றாக்குறை இல்லை


 (எம்.மனோசித்ரா)


நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி விநியோகத்தில் பற்றாக்குறை இல்லை. எனினும் நாளாந்த கேள்வியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள அதேவேளை, காய்கறி அறுவடை சுமார் 25 சதவீதம் குறைவடைந்துள்ளதாக துறைசார் அதிகாரிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர்.


தித்வா புயலால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும்  இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்குமான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  திங்கட்கிழமை (8) நுவரெலியா மாவட்ட  செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதன் போதே அதிகாரிகளால் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.


சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 1421 ஹெக்டயர் காய்கறி பயிற்செய்கைகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில்  விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


பயிர்கள் சேதமடைந்ததால்  நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி அறுவடை சுமார் 25 சதவீதம் குறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். நுவரெலியா மாவட்டத்துக்கு நாளாந்த காய்கறி விநியோகத்தை மேற்கொள்ள முடிந்துள்ள போதும் நாளாந்த கேள்வியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


நுவரெலியா மாவட்டத்தில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலைகள் அதிகரித்துள்ளதாகவும் பரப்பப்படும் தவறான செய்தியே இதற்குக் காரணம் என்றும் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் மேலும் சுட்டிக்காட்டினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »