பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் , பூஸா சிறைச்சாலையின் விசேட பிரிவின் அறைகள் மற்றும் மைதானங்களை கடந்த 24ஆம் திகதி சோதனைக்குட்படுத்தியபோதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, விசேட பிரிவின் A வகுப்பு அறைகளில் 02 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், 02 தொலைபேசி சார்ஜர்கள், 03 டேட்டா கேபிள்கள், 01 சார்ஜர் பாகம், 02 ஹெட்செட்கள் , கையடக்க தொலைபேசி உதிரிப்பாகங்கள், 02 புகையிலை துண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக சிறைச்சாலை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், ஜனவரி முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் புஸா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, 133 கையடக்க தொலைபேசிகள், 159 சிம் அட்டைகள், 110 தொலைபேசி சார்ஜர்கள், 122 டேட்டா கேபிள்கள், 02 memory card, 12 தொலைபேசி பெட்டரிகள், 56 Adapters, 12 சிகரட்டுகள், 2 கிராம் 840 மில்லிகிராம் ஹெரோயின், 40 கிராம் 12 மில்லிகிராம் புகையிலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
