Our Feeds


Monday, December 15, 2025

Zameera

மனிதாபிமான உதவிகளுடன் மற்றுமொரு இந்திய விமானம் நாட்டுக்கு


இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய சரக்கு விமானமான சி-17 (C-17) ரக விமானம் ஒன்று நேற்று (14) பிற்பகல் 03.07 மணியளவில் இந்தியாவின் ஆக்ரா நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

இதில் 25 மெட்ரிக் தொன் எடையுள்ள, நாட்டின் சுகாதார சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான 17 வகையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பெருமளவிலான உலர் உணவுப் பொருட்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த அனர்த்த நிவாரண உதவிப் பொருட்களை விமானத்திலிருந்து இறக்கிய பின்னர், மஹியங்கனை பிரதேசத்தில் கள வைத்தியசாலை ஒன்றை நடத்தி வந்த 85 பேர் கொண்ட மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ உபகரணத் தொகுதியையும் ஏற்றிக்கொண்டு அவ்விமானம் அங்கிருந்து வெளியேறியது. 

குறித்த இந்திய மருத்துவக் குழுவினரை வழியனுப்பி வைப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். 

இந்த இந்திய மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனைப் பணியாளர்கள் அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் உட்பட 7,000 நோயாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளனர். 

இவ்விமானம் மீண்டும் பிற்பகல் 05.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் ஆக்ரா நகரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »