Our Feeds


Thursday, February 5, 2026

Zameera

ஸ்மார்ட் போர்டு விநியோகம் ஆரம்பம்; பெற்றோரிடமிருந்து நிதி சேகரிப்பை நிறுத்த உத்தரவு - பிரதமர்


 

புதிய கல்வி மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போர்டுகளைக் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதற்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துமாறும், இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அங்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,


இலவசக் கல்வி என்பது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையாக இல்லாவிட்டாலும், இந்தச் சந்தர்ப்பத்திலாவது அதற்காக அவர் குரல் கொடுப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் சமூக ஊடகங்கள் அல்லது வதந்திகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன். இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ நாம் எந்த முடிவும் எடுக்கவில்லை. 

விக்ரமாராச்சி மருத்துவ பீடம் எவ்வித விதிமுறைகளுமின்றி ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இன்று அந்த மாணவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். இது ஒரு அரசியல் தீர்மானம் அல்ல. விக்ரமாராச்சி மருத்துவ பீடத்தின் பிரச்சினை தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே நாம் செயற்படுகிறோம். என தெரவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »