2027 ஆம் ஆண்டு முதல் தரம் ஆறுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஊவா வெல்லஸ்ஸ இரு திசைகளின் பிரதான சங்கநாயக்கரும், யுத்தகனாவ ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான அரச பண்டித வணக்கத்திற்குரிய கல்தெம்வத்தே நந்தரதன நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பாடநூல் அச்சிடும் பணிகளைக் கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அந்த நிதியொதுக்கீடுகளைப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக முறையாகப் பயன்படுத்துமாறும், அதற்கமையப் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான கோரிக்கைகளை முன்வைக்குமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டார்.
