Our Feeds


Thursday, April 16, 2026

Zameera

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் அதிகளவில் திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு


 மின்சார உற்பத்திக்காக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீரை வழக்கத்திற்கு மாறான முறையில் திறந்துவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் வெகுஜனச் செயலாளர் துமிந்த நாகமுவ இன்று (15) நுகேொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனை வெளிப்படுத்தினார்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக, வெப்ப மின் உற்பத்தி குறைந்துள்ளதைக் ஈடுகட்டும் ஒரு தீர்வாகவே இந்த நடவடிக்கை எடுக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார். கடந்த மார்ச் 24ஆம் திகதி விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"தரம் குறைந்த நிலக்கரியால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்க அதிக செலவாகும் என்பதால், அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தும்போது ஏற்படும் எதிர்ப்பைத் தவிர்க்க அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீரை குடிநீர் தேவைக்காக கடல் மட்டத்திலிருந்து 422 மீற்றர் மட்டத்தில் பராமரிக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த மட்டம் குறையக்கூடும்" என அவர் தெரிவித்தார்.

மின் உற்பத்திக்காக அதிக நீர் பயன்படுத்தப்படுவதால், கண்டி, குண்டசாலை மற்றும் திகன ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பலகொல்ல நீரேந்து நிலையம் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் சுமார் 17,000 நீர் இணைப்புகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நாளாந்தத் தேவையான 12,000 கன மீற்றர் நீருக்குப் பதிலாக 500 கன மீற்றர் மாத்திரமே விநியோகிக்க முடிவதாகவும் அவர் கூறினார்.

மேலும், பல்லேகல முதலீட்டு வலயத்திலுள்ள சில தொழிற்சாலைகள் நீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மூடப்பட்டதாகவும், இதன் விளைவாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தெம்பே நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவத்தில் சிக்கல் ஏற்பட்டு விவசாயமும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்த துமிந்த நாகமுவ, இந்த முட்டாள்தனமான முடிவை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »