Our Feeds


Friday, April 10, 2026

Zameera

புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை


 புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். 


இன்று (10) காலை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார். 


பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பது திட்டமிடப்பட்ட குழுக்களின் செயல் எனத் தெரிவித்த அமைச்சர், இதற்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்தவும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


அங்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், பெண்களுக்கான கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களுக்கு முதல் நாளே சேதம் விளைவிக்கப்பட்ட நிலையில் அவை மீண்டும் பொருத்தப்பட்டதன் பின்னர் நேற்று (09) இரவு இரண்டாவது முறையாகவும் உடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


இது ஒரு திட்டமிடப்பட்ட குழுவின் செயல் எனத் தெரிவித்த அமைச்சர், பஸ் நிலையத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 


இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, 


அரசியலில் நமக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் இது பொதுமக்களின் சொத்து, மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. 


இவற்றுக்குச் சேதம் விளைவிக்க இடமளிக்க முடியாது, இதற்கு எதிராக நாம் சட்டத்தை அமுல்படுத்துவோம். 


அதேபோல் இங்கு பாதுகாப்பையும் பலப்படுத்துவோம். சிசிடிவி (CCTV) கமராக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, அதனை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »