அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், "இவ்வாறான முறையில் நடந்துகொண்டால் இன்று வழங்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை நான் நடத்தமாட்டேன். இந்த வேலைநிறுத்தம் அநியாயமானது. இதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் முகங்கொடுக்கத் தயாராக உள்ளோம்" எனத் குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கங்களுக்காக ஒரு சிறிய குழுவினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தத்தை தொடர வேண்டாம் எனத் கேட்டுக்கொண்ட அமைச்சர், இன்று முதல் பணியைப் பொறுப்பேற்கவுள்ள புதிய வைத்திய அதிகாரிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால், எவ்வித அச்சமும் இன்றி அவர்கள் கடமைக்கு சமூகமளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் பயிற்சிக்கு பிந்தைய நியமனங்களை வழங்குவதில் ஏதேனும் தவறு இழைக்கப்பட்டிருந்தால், அதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடுவதே சிறந்தது எனச் சுட்டிக்காட்டிய அவர் மேலும் கூறியதாவது:
"மத்திய கிழக்கில் நெருக்கடி நிலவும் வேளையில், இவ்வாறு ஐந்து நாட்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. பயிற்சிக்கு பிந்தைய மருத்துவ நியமனப் பட்டியலைத் தயாரிப்பதில் GMOA இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நின்றே அவர்கள் இந்தப் போராட்டத்தைச் செய்கின்றனர். முதல் நியமனத்திற்கு இடமாற்றச் சபை அவசியமில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு குழுவினரை அழைத்து, நியமனங்களைப் பொறுப்பேற்க வேண்டாம் என அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். 453 வைத்தியர்களில் 436 பேர் ஏப்ரல் 4 ஆம் திகதியாகும் போது தமக்கு இந்த நியமனம் வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ளவர்களில் 16 பேர் பயிற்சிகளைச் சரியாக முடிக்காதவர்கள். உண்மையில் ஒருவர் மாத்திரமே விண்ணப்பிக்கவில்லை. எனவே, இந்த வேலைநிறுத்தத்திற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை."
