இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சாதனை அளவிலான வளர்ச்சியைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் சுற்றுலாத்துறை தனது வலுவான நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஓரளவுக்கு வீழ்ச்சி காணப்பட்டது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மற்றும் உலகளாவிய பயண நிச்சயமற்ற தன்மைகளே இதற்கு முக்கிய காரணம் எனத் துறைசார் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
2026 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித்த ஹேரத்,
கடந்த 2025 ஆம் ஆண்டின் சாதனையைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் மே மாத இறுதிக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இலங்கையை உலகின் முன்னணி சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்துத் துறைசார் பங்குதாரர்களுக்கும், எமது நாட்டைத் தேர்ந்தெடுத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டும் முக்கிய துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை விளங்கும் நிலையில், வரும் மாதங்களிலும் இந்த வளர்ச்சி சீராகத் தொடரும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.
