காப்புறுதி அட்டை டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையின்
கீழ், எதிர்காலத்தில் காப்புறுதி தொடர்பான அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக இலங்கை காப்புறுதியாளர்கள் சங்கத்தின் பொதுக் காப்புறுதி மன்றத்தின் தலைவர் தினூஷ திலங்க தெரிவித்துள்ளார்.இன்று (25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற டிஜிட்டல் காப்புறுதி அட்டை தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது தங்களது வாகனங்களுக்குக் கிடைக்கும் காப்புறுதி அட்டை இனிமேல் அச்சிடப்பட்ட வடிவில் கிடைக்காது என்றும், இனிவரும் காலங்களில் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து அதற்குரிய டிஜிட்டல் அட்டை மாத்திரமே வழங்கப்படும் என்றும் கூறினார்.
அந்த டிஜிட்டல் காப்புறுதி அட்டையை தங்களது கைபேசிகள், இணையதளம் அல்லது QR குறியீடுகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட டிஜிட்டல் காப்புறுதி அட்டையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரிபார்த்துக் கொள்ள முடியும் என்றும், அதற்காக '1338' என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைப் பயன்படுத்தி அந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
