அதிகாரப்பூர்வ பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் நிலவிய போதிலும், மாற்றியமைக்கப்பட்ட அல்லது தரமற்ற இலக்கத் தகடுகளைப் பொருத்திய வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுரை விடுத்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ இலக்கத் தகடுகள் இதுவரை வழங்கப்படாத போதிலும், மாற்றியமைக்கப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களைச் செலுத்துவது சட்டவிரோதமானது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைய, வாகன இலக்கத்தை A4 அளவிலான காகிதத்தில் அச்சிட்டு காட்சிப்படுத்துவதற்கு சாரதிகளுக்கு அனுமதி உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழங்குனர் ஒருவர் இல்லாத காரணத்தினால், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் பணிகள் கடந்த 10 மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
அறிக்கைகளின்படி, இதன் விளைவாக சுமார் 400,000 இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வருகின்ற ஜூன் மாதம் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், இவ்வாறு தற்காலிகமாக அல்லது தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இலக்கத் தகடுகளைக் காட்சிப்படுத்தும் வாகனங்களுக்கு பொலிஸார் அபராதம் விதிப்பது குறித்து சாரதிகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸார், அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்காத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு உரிமை உண்டு எனக் கூறியுள்ளனர்.
