ஹமீத் அல்-ஹுசைனியா கல்லூரியில் அல் ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் ஓம்னி பிளொக் புதிய ஒன்பது மாடி வளாகத்திற்கு
அடிக்கல் நாட்டப்பட்டது : பிரதி சபாநாயகர் பங்கேற்றார்.Al Haj Eliyas Abdul Kareem ΟΜΝΙ Block
நூருல் ஹுதா உமர்
கொழும்பு 12 ஹமீத் அல்-ஹுசைனியா கல்லூரியின் 141 ஆண்டு கால கல்விப் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயத்தைப் பதிக்கும் வகையில், முன்மொழியப்பட்டுள்ள ஒன்பது மாடிக் கல்வி, விளையாட்டு மற்றும் புத்தாக்க வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) கோலாகலமாக நடைபெற்றது.
இந்தப் பாரிய கல்வித் திட்டத்தின் புதிய கட்டிடத்திற்கு "அல் ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் ஓம்னி பிளொக்" (Al Haj Eliyas Abdul Kareem Omni Block) என உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டதுடன், அதற்கான நினைவுக் கல்லும் திறந்து வைக்கப்பட்டது.
மறைந்த அல் ஹாஜ் எம்.எச். உமர் அவர்களின் கல்வித் தொலைநோக்குப் பார்வையையும், ஹமீத் அல்-ஹுசைனியா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியையும் அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், லைட் ஃபார் லைஃப் (Light for Life – LFL) அமைப்பின் தலைவர் அல் ஹாஜ் எஸ்.எஸ்.யூ. ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான பணிப்பாளர் சபையின் அழைப்பின் பேரிலும், மலிபன் வோவன்ஸ் (Maliban Wovens Pvt. Ltd.) நிறுவனத்தின் தலைவர் அல் ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் அவர்களின் அனுசரணையிலும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதிலும் தேசிய அபிவிருத்தியை வலுப்படுத்துவதிலும் தரமான கல்வி மற்றும் நவீன கல்விசார் உட்கட்டமைப்புகள் வகிக்கும் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார்; அத்துடன், இந்த முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்ட 'லைட் ஃபார் லைஃப்' (Light for Life) அமைப்பு மற்றும் ஹமீதியன் சமூகத்தினரின் கூட்டு முயற்சிகளை அவர் பாராட்டினார்.
மேலும், கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக பிரதம அதிதி, கௌரவ அதிதி, அல்-ஹாஜ் எலியாஸ் அப்துல் கரீம் மற்றும் அவரது குடும்பத்தினர், 'லைட் ஃபார் லைஃப்' (LFL) அமைப்பின் பிரதிநிதிகள், ஹமீத் அல்-ஹுசைனி கல்லூரியின் அதிபர், மற்றும் நன்கொடையாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் இணைந்து அடிக்கல் நாட்டும் நிகழ்வை மேற்கொண்டனர்.
அமைக்கப்படவுள்ள இந்த ஒன்பது மாடிகளைக் கொண்ட கல்வி, விளையாட்டு மற்றும் புத்தாக்க வளாகம் இக்கல்லூரிக்காக மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய கல்விசார் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இது கட்டி முடிக்கப்பட்டதும், நவீன 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப (ICT) ஆய்வகங்கள், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி வசதிகள், விரிவுரை அரங்குகள், மொழி மையங்கள், விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர் மேம்பாட்டு வசதிகள் மற்றும் நவீன நீச்சல் தடாக வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைய உள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முஃப்தி, வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், அதிபர்கள், நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலதரப்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கல்வியின் மூலம் எதிர்கால தலைமுறையை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் திட்டம், ஹமீத் அல்-ஹுசைனியா கல்லூரியின் வரலாற்றில் நீடித்த கல்வி மரபை உருவாக்கும் முக்கிய முதலீடாக கல்வியாளர்கள் மற்றும் பழைய மாணவர்களால் வரவேற்கப்படுகிறது.